Skip to main content

2000 ரூபாய் நோட்டா...? எச்சரிக்கை அது கள்ள நோட்டாக இருக்க கூடும்.. -  வியாபாரிகள் கலக்கம் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

2000 rupee note ...? Warning It may be a counterfeit note .. - Merchants upset

 

ஒரே நாள் இரவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து, புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுக்களை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.


ஆனால், தற்போது அந்த 2,000 ரூபாய் நோட்டு பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில் அரசு அச்சடித்து வெளியிட்டுள்ள அதே 2,000 ரூபாய் நோட்டு போல ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

 

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் கோவில் வீதியில் 200க்கும் மேற்பட்ட மொத்த மளிகை கடைகள், மிட்டாய் கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளன. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கடை வீதி கடைகளில் போலி ரூபாய் நோட்டு கொடுத்து மோசடிகள் நடந்துவருகின்றன. இது வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஒரு மொத்த வியாபார மிட்டாய் கடை உள்ளது. அங்கு நகரின் பல பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக மிட்டாய் வாங்கி செல்வது வழக்கம். 17ந் தேதி மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க வந்த பெண் ஒருவர், 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து மிட்டாய் வாங்கியுள்ளார். அதேபோல வேறொரு பெண் அதே மிட்டாய் கேட்டு இரண்டாம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், பணத்தை பரிசோதனை செய்ததில் பெண் கொடுத்த ரூபாய் நோட்டு போலி கள்ள நோட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.


அப்போது முதலில் பணம் கொடுத்த பெண், மிட்டாய் வேண்டாம் என கூறி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர்  இருவரிடமும் இருந்த மிட்டாய்களை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். இதேபோல மார்கெட்டில் சில கடைகளில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதும் மீதம் ரூபாயைப் பெற்று மோசடி செய்யும் செயல்களும் நடந்துள்ளன.


போலி ரூபாய் நோட்டுகளை கடை வியாபாரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக முதலில் ஒரு பெண் வந்து போலி ரூபாய் நோட்டுகளை கொடுப்பார். பின்னர் சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் வந்து உண்மையான ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். இதனால் கடைக்காரர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரிடம் பணத்தை கொடுத்து விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்த பெண் சிறிதளவு பொருட்களை வாங்கி கொண்டு நல்ல ரூபாய் நோட்டுக்களை கடைக்காரரிடம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

 

மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக வந்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடை வியாபாரிகள் தங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளுக்கு 2000 ரூபாய்  நோட்டுகளை யாராவது கொண்டு வந்தால் அதனை சரி பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மோசடி கும்பலை  பிடிக்க போலீசார்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.