Skip to main content

மனைவிக்காக தட்டிக் கேட்கச் சென்ற கணவர்; குத்திக் கொலை செய்த சிறுவன் 

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

17-year-old boy stabbed a teenager under the influence cannabis

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணலூரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜய்(35). இவரது மனைவி சித்ரா. இவர் தனது குடியிருப்பு அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும், ராஜேந்திரன் என்பவரின் மகனான 17 வயதுள்ள சிறுவன் சித்ராவை கிண்டல் அடித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து சித்ரா வீட்டிலிருந்த தனது கணவர் விஜய்யிடம் கிண்டல் தொடர்பாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், சிறுவனை அழைத்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கஞ்சா போதையில் இருந்த சிறுவன்  மறைத்து வைத்திருந்த, கத்தியை எடுத்து வந்து விஜய்யின் கழுத்தில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜய்யை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய்  உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய சிறுவனை பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் கொலை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிறுவன் தானாகவே முன்வந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

இச்சம்பவத்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கஞ்சா போதையில் கொலை செய்த சிறுவன் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் பெண்களை கிண்டல் செய்வதாகக் கூறி, சிலரை போலீசார் பிடித்துச் சென்றபோது அந்த சிறுவனும் அதில் இருப்பதை அறிந்து அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்