தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் இருக்கும் பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுடலை. இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றதால் தனியே வசித்த சுடலை கடந்த 24.11.2018 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சுடலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி நேற்று சுடலைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு நாளின்போது வந்து நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த சுடலை தீர்ப்பையடுத்து, திடீரென்று விஷம் கலந்து மறைத்து வைத்திருந்த குளிர்பான பாட்டிலை எடுத்துக் குடித்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பதறிப் போன நீதிமன்ற ஊழியர்கள், மற்றும் போலீசார் சுடலையை மீட்டு 108 ஆம்புலன்சை உடனடியாக வரவழைக்க, ஸ்பாட்டுக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுடலைக்கு முதலுதவி செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுடலை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை ஆணையர் சீனிவாசன் உதவி ஆணையர் பிரதீப் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாளை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.