
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அரசால் மீட்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோயில், சென்றாயப்பெருமாள் திருக்கோயில் மற்றும் கரிய காளியம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில்கள். இக்கோயிலுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதில் சுமார் 12.40 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததோடு அவர்கள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்தும் வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த ஆறு பேர் மீதும் வழக்குத் தொடுத்தனர். அதில் நான்கு வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு 10.25 ஏக்கர் திருக்கோயில் சுவாதீனம் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 2 ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தியூர் வட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு அங்குத் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் எனப் பலகையும் வைத்துள்ளனர்.