Skip to main content

சிறிய அளவில் சமரசம்... அதிமுகவுடனான கூட்டணி குறித்து ராமதாஸ் விளக்கம்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டு பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
 

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது தான் 2011-ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வந்தது. எனினும், இடைப்பட்டக் காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில்  2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

aiadmk - pmk alliance


செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. பா.ம.கவினர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தொடர்வண்டித்துறை இணை அமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பா.ம.க. வலிமையாக இருந்தபோது ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.
 

இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாட்டாளி மக்கள் கட்சி வகுத்து வருகிறது. இதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது’’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர்  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, ‘‘தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப் பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது’’ ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக் காரணிகளாக அமைந்தன. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். நாடாளுமன்ற மக்களவைக்கானத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.
 

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன.
 

2011-ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய  பிரதிநிதித்துவம்  பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான  திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட  இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும்,  கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.
 

அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற வினாவுக்கு கிடைக்கும்  விடை தான், யாருடன் கூட்டணி என்ற வினாவுக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். 
 

2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில் அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம், நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டன. ஆனாலும், மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவமையமாக உருவெடுத்திருக்கும்.


அதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்,  ரூ.50 கோடியில் மெட்ரோ  ரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.

 

aiadmk - pmk alliance


 

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுக்கு நான் பிறப்பித்திருந்த கட்டளை ‘‘தமிழகத்தில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர்கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது’’ என்பது தான். அதைப்போலவே, அனைத்துப் பாதைகளையும் அகலப் பாதைகளாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பா.ம.க. அமைச்சர்கள் ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது. ஆனால், 2009-ஆம் ஆண்டு தொடர்வண்டி  இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர் தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009-14 காலத்திலும் திமுக மத்திய அமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத் தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இக்காலத்தில் தொடர்வண்டித்துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்தது.
 

அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது. ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை  செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது, கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.
 

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பா.ம.க.வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு  தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது. கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.
 

தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க. அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து  கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.