Skip to main content

டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன்..! 4 மாதங்களுக்கு முன்பே சொன்ன நக்கீரன்!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதமே, தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக கட்சித் தலைமை. அந்த வகையில் விளாத்திகுளம் தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பொறுப்பாளராகவும், கூடுதல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவிக்கப்பட்டனர்.


அப்போது, விளாத்திகுளம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, “மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு எல்லாம் தேர்தலில் ‘சீட்’ கிடையாது என மறைமுக மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தாக்கினார். பதிலுக்கு கடம்பூர் ராஜூ தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று எதிர்வினையாற்றினார். 

 

m


  இதையடுத்து இருதரப்பையும் ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார். தொகுதியில் மார்க்கண்டேயனுக்கு தான் செல்வாக்கு என்பதால், அவருக்கு தான் இடைத் தேர்தலில் ‘சீட்’ என அப்போது பேசப்பட்டது.  இருந்தாலும் தனது ஆதரவாளர் சின்னப்பனுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுப்பதில் முனைப்பு காட்டினார் கடம்பூர் ராஜூ. இதையறிந்த மார்க்கண்டேயன், புதூர் கூட்டத்தில் சின்னப்பனை பேசவிடாமல் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

 

அப்போது, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, கட்சியின் மானத்தை காற்றில் பறக்கவிட்டனர். (இதனால் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன் என அப்போதே நக்கீரன் இணையத்தில் எழுதியிருந்தோம்.) இந்த நிலையில், சின்னப்பனுக்கு சீட் வாங்கி கொடுத்து காரியத்தை சாதித்துவிட்டார் கடம்பூரார்.  இதனால், இன்று தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை விளாத்திகுளத்தில் கூட்டி ஆலோசனை நடத்தினார் மார்க்கண்டேயன். 

 

m

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கட்சியின் தலைமை தவறான முடிவை எடுத்திருக்கிறது. இதனால், எனது செய்திதொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கும் சின்னப்பனுக்குமான மோதல் அல்ல இது.  எனக்கும் கடம்பூர் ராஜூவுக்கும் இடையேயான மோதல் இது. சின்னப்பன் 6 ஆயிரம் ஓட்டு வாங்கி தோற்பார். நாங்கள் 70 ஆயிரம் ஓட்டு வாங்கி ஜெயிக்கப்போறோம். இதுதான் நடக்கப் போகிறது” என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார். 


அதேபோல், ஓபிஎஸ்ஐயும் ஒரு பிடி பிடித்தார். “ஆர்.கே.நகரில் நாங்களும் போட்டியிட்டோம், தினகரனும் போட்டியிட்டார். அங்க ஜெயிச்சது தினகரன். ஏன்னா அவர்(தினகரன்)ஆளுமை மிக்கவர். அம்மா இறந்தப்ப எங்களுக்கு பெரும் இழப்பு. அப்ப அந்த குடும்பம் (சசிகலா) அங்க இருந்துச்சு. அப்ப தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் எங்களை எல்லாம் மிஸ்கைடு பண்ணிட்டார். அதனால், நாங்களும் அவங்க மேலே (சசிகலா குடும்பம்) சேற்றை வாரி இறைச்சிருக்கோம். ஆனால், எங்களுக்கே தெரியாமல் இவரு தினகரனை ரகசியமாக சந்திச்சார். அப்பத்தான் இவர் மேலே எங்களுக்கு சந்தேகம் வந்திடுச்சு. இனிமேல் எனக்கு கட்சித் தலைமை சீட் கொடுக்க முன்வந்தாலும், அதை ஏற்கும் மனநிலையில் இல்லை” என்றும் மார்க்கண்டேயன் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார்.


  முன்னதாக மார்க்கண்டேயன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரை ஓரம்கட்டி பேசினோம். “இவரு பேசுறத வச்சி பார்க்கும்போது, நிச்சயம் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவார் என்பது நல்லா தெரியுது. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருத்தர் பேரையும் சுட்டிக்காட்டி பேசி, அவங்களுக்கு செய்த உதவிகளையும், கட்சிக்காக 20 வருடமாக உழைத்ததையும் உருக்கமாக பேசினார். 


சீட் கேட்டு ஓபிஎஸ்ஐ பார்த்தேன். அவரு இபிஎஸ்ஐ பார்க்க சொன்னார். இபிஎஸ்யும் பார்த்தேன். அவரு கடம்பூர் ராஜூ ராஜினாமா பண்ணிடுவேன்னு மிரட்டுறார். அதனால் தான் சின்னப்பனுக்கு சீட் கொடுத்தேன் என்கிறார். டிடிவி தரப்பை பலமுறை நான் விமர்சித்து பேசி இருக்கிறேன். அதை இப்போது வாபஸ் வாங்கிக்கிறேன் என்றார். மேலும் அதிமுக-அமமுக விரைவில் ஒன்று சேரும் என்றார். எனவே, தினகரன் அணி சார்பில் மார்க்கண்டேயன் களம் இறங்குவது உறுதி” என்றார் அந்த நிர்வாகி.

 

ஆக.. அதிமுகவில் கலகம் பிறந்துவிட்டது.  இது விளாத்திகுளம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு மட்டுமல்ல, தூத்துக்குடியில் களம் இறங்கும் தமிழிசை(?)க்கும் சிக்கலை ஏற்படுத்தும்.!


 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.