Skip to main content

‘ஸ்கெட்ச்’ தினகரன்! ‘டிக்கிலோனா’ அமைச்சர்! ‘சென்டிமென்ட்’ திமுக! -விறுவிறு விருதுநகர்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தலும் வந்துவிடக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியும் பரபரத்துக் கிடக்கிறது. ஏதேதோ பண்ணுகின்றனர்.  விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் தட்பவெப்பம் இது –

 

அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதே நோக்கம்!
-அமமுக அதிரடி!

“பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். வருங்காலப் பிரதமரையே நிர்ணயிக்கும் கட்சிதான் அமமுக.” என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசினார் டிடிவி தினகரன். மதுரையிலோ “இடைதேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்” என்று கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.   ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று அக்கட்சியினரே தினகரனை ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றனர். ஆனாலும், அவர் நினைத்ததைச் சாதித்துக்காட்டுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. 
தினகரன் மனதில் என்னதான் இருக்கிறதாம்?


“தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளில் 50000-லிருந்து 70000 வரை தனக்குச் சாதகமானவை என்றெண்ணும் தினகரன், பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அதிமுகவுக்குத் தோல்வியைத் தரமுடியும் என்று உள்ளுக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதிமுக வாக்குகள் மட்டுமல்ல, திமுக வாக்குகளும் சாதி அடிப்படையில் தினகரன் ஆதரவு நிலை எடுக்கப்போவதை தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரிந்துகொள்ளலாம்.  வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும் ஒரு தொகுதியில்கூட அமமுக வெற்றி பெறாது என்பது அறிவுஜீவியான அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், அரசியல் தொலைநோக்குடன், வெற்றி உறுதி என்று பேசி,  தேர்தல் களத்தைக் கலக்கி வருகிறார். வரும் தேர்தலில்,  தனிப்பெரும் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்தி அதிமுக ஆட்சியைக் கவிழச் செய்வதே அவருடைய இலக்காக இருக்கிறது. அதற்காகவே,   ‘ஸ்கெட்ச்’ போட்டு செயல்படுகிறார்.” என்றார் அமமுகவில் தினகரனின் எண்ண ஓட்டத்தை அறிந்த நிர்வாகி ஒருவர். 
 

 

t

 

தினகரனுக்கு எதிரான திடீர் பாய்ச்சல்!
-டிரென்டிங் அமைச்சரின் டிக்கிலோனா வாய்ஸ்!


தினகரன் விஷயத்தில் பதுங்கியே இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வழக்கத்துக்கு மாறாக இப்போது வேகம் காட்டுகிறார்.  மேடைகளில் தினகரனை விமர்சித்து அவரைப் பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தைப் பிரதிபலித்துவந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, தினகரனின் சமீபத்திய பேச்சு எடப்பாடி மீதான நேரடி தாக்குதலாக இருப்பதால்,  அதற்குப் பதிலடி தரும் விதத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்.

 

r

 

தினகரனால், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக இழக்கும் முக்குலத்தோர் வாக்குகள் குறித்தெல்லாம் மா.செ. ராஜேந்திரபாலாஜி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. நாடார் வாக்குகள், தேவேந்திரகுல வாக்குகள் மற்றும் இதர சமுதாய வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்ற கணக்கோடு இருக்கிறார் அமைச்சர். ரூ.1000 பொங்கல் நிதி, ரூ.2000 சிறப்பு நிதி பெற்ற மக்கள், தேர்தலில் எடப்பாடி பக்கம் நிற்பார்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும், மேடைகளில் அளவுக்கதிகமாக மோடிக்குத் துதிபாடுவது,  அதிரடியாக ’டிக்கிலோனா’ டைப்பில் எதையாவது பேசி ட்ரென்டிங் ஆக்குவது என, தனி ஆவர்த்தனமாகச் செயல்பட்டுவரும் ராஜேந்திரபாலாஜி, நிர்வாகிகளை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதில்லை என்று அக்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு அமைச்சர் வட்டத்திலோ “ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைக் காட்டிலும் மக்களைச் சந்திப்பதையே முக்கியமாக நினைக்கிறார் அமைச்சர். வெற்று அறிக்கைவிடும் அரசியல்வாதியாகவா இருக்கிறார்? தொகுதி முழுவதும் சுற்றிவந்து மக்களைச் சந்திக்கிறார்.

 

பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களிலெல்லாம் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இத்தனை வேகமாகச் செயல்படுபவரைக் குறைகூறுவது அர்த்தமற்றது.” என்கிறார்கள். ஆனாலும், அதிமுக நிர்வாகிகள்  “வாக்குகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எத்தனை முக்கியமானது, பூத் கமிட்டி கூட்டம் அல்லவா அதற்கான வழிவகுக்கும். அதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி?” என்று கேட்கிறார்கள். 

 

தேர்தல் வெற்றிக்காக திமுக நடத்திய ‘சென்டிமென்ட்’ மாநாடு!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மா.செ.க்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.வான தங்கப்பாண்டியன் மீது செம கடுப்பில் இருப்பதாகப் புகார் வாசிக்கிறார்கள்.  கிராமசபை கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது, தங்கப்பாண்டியன் மீது வெளிப்படையாகவே எரிச்சலை உமிழ்ந்தாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. மா.செ.க்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசுவைக் காட்டிலும், எம்.எல்.ஏ. என்ற முறையில் தங்கப்பாண்டியன் ஆக்டிவாகச் செயல்படுவதுதான் உறுத்தலுக்குக் காரணமாம்.

 

 விளம்பர வெளிச்சம் தேடுகிறார் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை வெளிப்படையாகவே  விமர்சிக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று கொளுத்திப் போடுகிறார்கள். நாம் ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடமே கேட்டோம். அவரோ “அரசியலில் நான் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் பாடம் பயின்று வளர்ந்து வருபவன். தவறான தகவலை யாரோ பரப்பியிருக்கிறார்கள். இரண்டு மா.செ.க்களும் என்னை நல்லபடியாக நடத்துகிறார்கள். ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று வேகமாக மறுத்தார்.  

 

v

 

2004 பாராளுமன்ற தேர்தலின்போது விருதுநகரில் தென்மண்டல மாநாட்டை நடத்தியதாம் திமுக. அப்போது 40-க்கு 40 வெற்றி சாத்தியமாயிற்றாம். அதனால், அதே விருதுநகரில் ‘சென்டிமென்ட்’ ஆக கடந்த 6-ஆம் தேதி  மாநாடு நடத்தியது திமுக. அதுவும் அமாவாசை நாளில். இறக்கும் வரையிலும் விடாப்பிடியாக பகுத்தறிவு பேசிவந்த கலைஞர், தன் உயிரைக்காட்டிலும் மேலாக மதித்த திமுகழகம், தற்போது ‘சென்டிமென்ட்’ பாதைக்கு மாறியிருப்பது விந்தைதான்! 


தொண்டர்கள்,  சிங்கிள் டீ குடித்துவிட்டு தெருக்களில் கட்சிக் கொடிகளைத் தோரணம் கட்டியது,  ஊர் ஊராகச் சென்று  கட்சி போஸ்டர் ஒட்டியதெல்லாம் தி.மு.கழகத்தின் கடந்த காலமாகிவிட்டது. தங்களை அம்போவென விட்டுவிட்டு, தலைவர்கள் மட்டுமே முன்னேற்றம் கண்டதால், தொண்டர்களும் காலப்போக்கில் மாறிவிட்டனர்.  அதன் விளைவுதான் – விருதுநகரில் நடந்த  தென் மண்டல திமுக மாநாட்டுக்கு தலைக்கு ரூ.200 கொடுத்து, ஆட்களைக் கூட்டிவர வேண்டிய நிலைக்கு அக்கட்சி ஆளானது. 

 

“கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடாகி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும்,  பிரம்மாண்ட கூட்டம் நடத்தி வேட்பாளர்களை மேடை ஏற்றியிருக்கலாம். இத்தனை செலவழித்து ‘சென்டிமென்ட்’ மாநாடு நடத்தியிருக்க வேண்டியதில்லை.”  என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.   
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.