Skip to main content

திருவாரூர் தேர்தல் - திமுக வேட்பாளர் யார்?

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
mk

 

திமுக தலைவர் கலைஞர் காலமானதால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று (31-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

 

ஸ்டாலின்: சட்டத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சி.வி. சண்முகம்  வீராவேசமாக மிகுந்த ஆத்திரத்தோடு, கோபம் கொப்பளிக்கக்கூடிய வகையில் அவர் தந்த பேட்டியை, நானும் சில தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அதிலே அவர் தெளிவாக சொல்லியிருக்கின்றார். மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா  மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார். இதற்காகத் தான் அவர் மரணமடைந்த  நேரத்திலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்தது, முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்திட வேண்டும் என்று நான் அன்றைக்கே தெளிவாக எடுத்துச் சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் நான் விமர்சிக்கப்பட்டேனே தவிர அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இப்பொழுது, சட்ட அமைச்சராக இருக்கக்கூடிய சண்முகம்  சொல்லியிருப்பது, சுகாதாரத் துறையினுடைய செயலாளர் இராதாகிருஷ்ணன் போலீஸ் கஷ்டடி எடுத்து அவரை விசாரித்தால் உண்மை வெளிவரும் என்று அவர் சொல்லுகின்றார். எனவே, இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் போட்டு இதை விசாரணை நடத்திட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே, இந்த நிலையில் மீண்டும் நான் திராவிட முன்னேற்றக் கழக்த்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் நான் சொல்ல விரும்புவது, உடனடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதென்பது உண்மை – உண்மை – உண்மை. ஆகவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உணமைத் தெரியவரும்.

 

செய்தியாளர்: ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்துகின்ற நேரத்தில், காவல்துறை இந்த வழக்கை எடுத்து விசாணை நடத்திட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சொல்லுகின்றார். இது பற்றிய தங்களின் கருத்து?

ஸ்டாலின்: சட்டத்துறை அமைச்சரே சொல்லுகின்ற காரணத்தினால் தான் நான் மீண்டும் சொல்லுகின்றேன். இதை, சி.பி.ஐ எடுத்து விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து.

 

செய்தியாளர்: திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஸ்டாலின்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு இன்று எங்களுடைய தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி, வருகின்ற ஜனவரி மாதம் 28-ம் தேதி திருவாரூரில் நடைபெறக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கக்கூடியவர்கள் வருகின்ற 2-ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி 3-ம் தேதி மாலை 6:00 மணி வரையில் விண்ணப்பிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பணி முடிந்ததற்குப் பிறகு மறுநாள் 4-ம் தேதி மாலை 5:00 மணியளவில் யார் யார் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்களோ அவர்களையும், மாவட்டக் கழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் அழைத்து, கலந்துப் பேசி அதற்குப் பிறகு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை முடிவு செய்து, 4-ம் தேதி மாலையில் தி.மு.கழகத்தின் சார்பில் யார் போட்டியிடுகின்றார் – யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கின்றோம்.

 

செய்தியாளர்: தி.மு.கழகத்தின் தேர்தல் வியூகம் என்பது என்னவாக இருக்கும்?

ஸ்டாலின்: வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும்.

 

செய்தியாளர்: மக்களிடம் சென்று நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

ஸ்டாலின்: மக்களிடம் சொல்லுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது. அதை ஒரே நிமிடத்தில் சொல்லிவிட முடியாது.

 

செய்தியாளர்: 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது. அந்தத் தேர்தலில் யார் பலசாலி என்பதை நிரூபிக்கக்கூடிய தேர்தலாக, இந்தத் திருவாரூர் இடைத்தேர்தலை பார்க்கமுடியுமா?

ஸ்டாலின்: நாளைய தினம் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. 2019-ல் நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் வரப்போகின்றது. அந்த மாற்றத்தை இன்றைக்கு மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றார்கள். எனவே, அந்த மாற்றத்தை  வரவேற்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அதேபோல் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.