Skip to main content

இளைஞர்களுக்கு ரூ.500; கர்நாடகத்தில் பாஜக பட்டுவாடா

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

Rs.500 for youth; BJP is paying in Karnataka

 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். கொடச்சி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு பொதுக்கூட்டம் முடிந்த பின் ரூ. 500 வழங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் தற்போது பாஜகவினர் இளைஞர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது.

 

சில தினங்கள் முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். உடுப்பி மாவட்டத்தில் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வினய்குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது அதில் பைகளில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கர்நாடக வாக்காளர்களுக்கு விரைவில் பட்டுவாடா செய்யப்படலாம். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த பணம் வழங்கப்படும் வீடியோ வெளியானதில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை பாஜகவினர் மீது காங்கிரஸ் சுமத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்