Skip to main content

“பிரச்சாரத்துக்குச் செல்லமாட்டேன்.." - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! 

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

 

 Premalatha Vijayakand  says that she will not go for campaigning

 

விருதாசலம் தொகுதியில், தே.மு.தி.க வேட்பாளராகப் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது, தே.மு.தி.க இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், அ.ம.மு.க கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “2006-ல் விஜயகாந்த் வெற்றிபெற்ற இந்தத் தொகுதியில், 2021ல் நான் போட்டியிடுகிறேன். ஏன் விருத்தாசலம் தொகுதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனச் சென்னையில் கேட்டார்கள். கேப்டனுக்கும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்திற்கும் முதல் வெற்றியைத் தந்தது விருத்தாசலம் தொகுதி. அன்றிலிருந்து விருத்தாசலம் தொகுதி மக்களின் உயிரோடும், உணர்வோடும், ரத்தத்தோடும் கலந்ததுதான் எங்கள் தேமுதிக. 

 

2006-ல் விஜயகாந்த் அத்தனை நல்ல திட்டங்களையும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு செய்துள்ளார். அதன்பிறகு, 2011-ல் எங்கள் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வெற்றியைத் தந்தார்கள். மீண்டும், இந்த வரலாற்றை 2021-ல் நிரூபிப்போம். முரசு சின்னத்தில் போட்டியிடும் நான், அமோக வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறேன். இதுவரை, 16 ஆண்டு காலம், நான் தேர்தல் பிரச்சாரத்தை மட்டும் மேற்கொண்டு வந்தேன். முதல்முறையாக வேட்பாளராக நான் விருத்தாசலத்தில் போட்டியிடுகிறேன். அதனால், இந்த முறை மற்ற 59 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்குச் செல்ல இயலாது. ஏனென்றால், இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருக்கிறது. அதனால் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தலைவர் விஜயகாந்த் ஈடுபடுவார்.

 

2006-லேயே விஜயகாந்த், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். அதில், ஏதேனும் விடுபட்டிருந்தால் அந்த குறைகளையும் இந்த முறை நான் நிச்சயமாகச் சரி செய்வேன். விஜயகாந்த் சொல்லும் லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதனால், இலவசப் பொருட்களை கொடுப்பதற்குப் பதில் வேலைவாய்ப்பு, மக்களுக்குத் தேவையான இருப்பிடம், கல்வி, இலவச மருத்துவம் வழங்க வேண்டும். அதைவிடுத்து, பொருட்களை இலவசமாகக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது சரியல்ல.

 

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து நாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான தெளிவான விளக்கத்தை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அதனால், அது சம்பந்தமாக மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதைவிட நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம் என்பதே. 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி மிகவும் பலமான ஒரு கட்சியாகத்தான் உள்ளது. அதிலும் கிராமங்கள் முழுவதும் கிளைக் கழகங்கள் இருக்கும் ஒரு மாபெரும் கட்சியாகத் தான் உள்ளது. மே 2ஆம் தேதி எங்களுடைய பலம் என்னவென்று தெரியும்" என்றார்.

 

"விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வந்த நீங்கள், தற்போது தினகரனை முதல்வர் வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாங்கள் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அவர்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். எனவே ஏற்றுக் கொண்டோம்" என்று பிரேமலதா கூறினார். முன்னதாக விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்ற அவர், கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டி பிராது சீட்டு கட்டினார். அதனைத் தொடர்ந்து இன்று பிரேமலதாவுக்கு பிறந்த நாள் என்பதால் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆலய வளாகத்தில் பிறந்தநாள் 'கேக்' வெட்டிக் கொண்டாடினார். பின்னர், அ.ம.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சார் ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார்.