Skip to main content

திஹார் சிறையில் சிதம்பரம்?  பரபரக்கும் டெல்லி!  

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

டெல்லி திஹார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் கைது செய்யப்படும் வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். 


 ’’அந்த வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது சிறை நிர்வாகம். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம், அந்த அறைக்கு கொண்டு வரப்படலாம் ‘’ என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். 

 

p. chidambaram



மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதித்திருக்கும் அந்நிய முதலீடு தொகையை விட கூடுதலாக பல கோடிகளை (305 கோடி) பெற்றது ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவனம். சட்டவிரோதமாக அந்நிறுவனம் பெறப்பட்ட அந்த முதலீட்டு தொகைக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதித்தாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது சி.பி.ஐ.! அந்த கஸ்டடி 26-ந்தேதி  (திங்கள்கிழமை) முடிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் திஹார் சிறைக்கு அனுப்பப்படலாம் என்கிற பரபரப்பு டெல்லியில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 


 

இது குறித்து விசாரித்தபோது, ‘’ கஸ்டடி முடிந்ததும் சி.பி.ஐ.கோர்ட்டில் திங்கள்கிழமை சிதம்பரம் ஆஜர்ப்படுத்தப்படுவார். அப்போது, மேலும் சில நாட்கள் அவரை கஸ்டடி எடுக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம். அப்படி கோரிக்கை வைக்கப்படாத சூழலில், சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை ஜாமின் மறுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்ற காவலுக்கு சிதம்பரம் அனுப்பி வைக்கப்படுவார். அப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்படுவார் சிதம்பரம்.  அதேசமயம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமின் கேட்ட சிதம்பரத்திற்கு 26-ந்தேதி (திங்கள்கிழமை) வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு அதே தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். 


 

இந்த விசாரணை திங்கட்கிழமை வரும் போது, அமலாக்கத்துறையின் வாதங்களை உடைத்து முன் ஜாமின் பெற சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சிப்பார்கள். அப்போது சிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்கும்பட்சத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டால் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்து தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முயற்சிக்கும். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இல்லாமலும், ஜாமின் கிடைக்காமலும் போகும்பட்சத்தில் திகாருக்கு சிதம்பரம் அனுப்பப்படுவார் ‘’ என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.