Skip to main content

''ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்; நமக்கு விடிவு காலம் பிறக்கும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 02/04/2023 | Edited on 02/04/2023

 

"One country will have one election; A time of liberation will be born for us" - Edappadi Palaniswami's speech

 

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் விழுப்புரம் மாவட்ட முக்கிய பொறுப்பாளரான  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் மலர் கொத்துக் கொடுத்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

 

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''அதிமுகவை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள் தான் அழிவார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். எந்த பிரதிபலனும் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆண்டவனால் படைக்கப்பட்டவன் அதிமுக தொண்டன். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் இவர்கள் இருவரும். ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆருக்கும் வாரிசு கிடையாது. இங்கு குவிந்திருக்கின்ற நாம்தான் அவர்களுடைய வாரிசு. நம்மை தான் பிள்ளைகளாக பார்த்தார்கள். ஆகவே நம்முடைய வாழ்வு வளர்வதற்காக, நமது வாழ்வு செழிப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அதிமுக. ஆகவே இந்த இயக்கத்தை யாரும் சீண்டிப் பார்க்க முடியாது.யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.

 

ஏதோ வழக்குகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி அதிமுகவை அழிக்கப் பார்த்தால் கானல் நீராக தான் அது காட்சியளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதிமுக மீண்டும் ஆட்சி அரியணையில் அமரும். அது வெகு தொலைவில் இல்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தாலும் வரலாம். ஏனென்றால் அடிக்கடி மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற பொழுது சட்டமன்ற தேர்தலும் வரும். நமக்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண் முன் தெரிகிறது. எனவே அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்