நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர், அவரிடம் பணமும் கொடுக்கவில்லை, ஏமாறவும் இல்லை என்றும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர் என்று திமுகவின் ஆதிதிராவிட நல குழு மாநில துணை செயலாளர் சீனியம்மாள் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்தனர். எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன்
.
நான் மாநில நிர்வாகி, கொலையான உமா மகேஸ்வரி மாவட்ட நிர்வாகி. கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரவேண்டும் என்றோ நான் அவரிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை. கொலையான உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர்.
உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டது நான் டி.வி செய்தியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். காவல்துறை சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது.
என் மீது குற்றம்சாட்டி தி.மு.கவிற்கு அவபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர். காவல்துறை உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றார்.