
சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் நேற்று (26.03.2021) தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளரைப் புகழ்ந்து, ‘அவர் உங்கள் வீட்டுப் பிள்ளை, எங்கள் வீட்டுப் பிள்ளை. அவரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்’ எனக் கூறுவார்கள். ஒரு பெண் என்னிடம் கேட்டார் ‘ஒரு வேட்பாளரிடம் பிரச்சனை ஒன்றுக்காக இரவு நேரத்தில் சென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினால், அவர் நிதானத்துடன் இருப்பார் என்பதற்கு உறுதி கொடுப்பீர்களா?’ என்று கேட்டார். அதற்கு, இரவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீட்டின் கதவைத் தட்டி முருகனிடம் நீங்கள் உதவியைக் கேட்கலாம். அவர் விழிப்போடு இருப்பார், நிதானத்துடன் இருப்பார். தாமரை எப்போதும் தண்ணீரில்தான் இருக்கும். ஆனால் எங்கள் வேட்பாளர் முருகன் தண்ணீரில் மிதக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.