Skip to main content

ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! தமிழக வாழ்வுரிமை கட்சி இரங்கல்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
j anbazhagan dmk


பத்தாண்டு கால சட்டமன்ற தோழமை, பழகுதற்கினிய மாபெரும் பெருந்தன்மை, மறப்பதற்கிலா அரிய நண்பர் ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரோனா கொடியது, எவரையும் மடியச் செய்வது என்ற வகையில்தான், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகனையும் பழி தீர்த்திருக்கிறது.

ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் செலுத்தப்பட்டு, உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, அவரது சிறுநீரக, இதயச் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 10) காலை அவர் உயிரிழந்த துயரச் செய்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் 3 முறை எம்எல்ஏவாக வென்றவர். 2001இல் தியாகராய நகர் தொகுதி, 2011இல் மற்றும் 2016இல் சேப்பாக்கம் தொகுதி. அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

 

 


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

பத்தாண்டு காலம் சட்டமன்றத்தில் அன்பழகனுடன் பணியாற்றிய தோழமையால், பழகுதற்கினிய மாபெரும் அவரது பெருந்தன்மையை உணர்ந்தேன். அதன் மூலம் மறப்பதற்கில்லா அரிய நண்பராக நிரந்தரமாக என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார். ஆறாத் துயரில், மீளாத் துயரில் ஆழ்த்துகின்ற அன்பழகனின் அகால மறைவை எப்படித் தாங்குவது?

காலமே காலமே, கரோனாவே கரோனாவே, என்ன செய்ய முடியும் உங்களின் பழிவாங்கலுக்கு? பத்தாண்டு கால சட்டமன்றத் தோழமை, பழகுதற்கினிய மாபெரும் பெருந்தன்மை, மறப்பதற்கிலா அரிய நண்பர் ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்