Skip to main content

தமிழக முதலமைச்சர் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்திருப்பது வரவேற்புக்குரியது: ஈஸ்வரன்

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

E.R.Eswaran



இலவச மின்சாரத்திற்கு எதிரான மற்றும் மாநில உரிமைகளை பறிக்கின்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எதிர்த்து இருப்பதை வரவேற்கின்றோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமே கரோனா பாதிப்பினால் பாதித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது மொத்த உலகத்தின் கவனமும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பொருளாதார மீள் நடவடிக்கைகள் மீதும் திரும்பியிருக்கிறது. 
 

இந்த நேரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இலவச மின்சாரத்தைப் பறிப்பது போன்ற மாநில உரிமைகளைப் பறிக்கின்ற முயற்சிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதிலும், நாட்டின் பாதுகாப்பு மிகுந்த துறைகளில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதிலும் கொள்கை முடிவுகளை எடுத்து தன்னுடைய உள்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பார்க்கிறது. மாநில அரசுகள் எதிர்பார்த்து இருந்த கடன் வாங்குகின்ற அனுமதியை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்துவிட்டு அந்தக் கடனை வாங்க வேண்டுமென்றால் மத்திய அரசின் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பது மாநில உரிமைகளை மதிக்காத செயல். 
 


ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் எல்லா மாநில அரசுகளாலும் ஏற்கப்படாத ஒன்று. மின்சார பகிர்மானத்தை மத்திய அரசு கையில் எடுத்து கொள்வதையும் மாநில அரசுகள் விரும்பவில்லை. மாநில அரசின் ஒப்புதலுக்கு வரைவு திட்டத்தை அனுப்பிவிட்டு இதை ஒப்புக்கொண்டால்தான் உயர்த்தப்பட்ட கடன் வாங்க முடியும் என்று சொல்லி இருப்பது எத்தகைய நெருக்கடி என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 
 

கரோனா பாதிப்பிற்கு நிவாரணத் திட்டங்களை அறிவிக்கிறோம் என்று தனியார் மயமாக்குகின்ற மத்திய அரசின் முயற்சி உலக அளவில் இந்தியப் பணக்காரர்கள் முதலாம் இரண்டாம் இடத்தைப் பிடிக்க எடுத்திருக்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது. இந்திய தேசம் 80 சதவீத அடித்தட்டு மக்களைக் கொண்டது என்பதை மத்திய அரசு மறந்துவிட்டு முடிவுகளை எடுத்திருக்கிறது. 
 

http://onelink.to/nknapp

 

இந்தச் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து இருப்பது வரவேற்புக்குரியது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பாதுகாப்பதற்கும், மாநிலத்தின் தனித்தன்மையைச் சமரசம் செய்யாமல் இருப்பதற்கும் எதிர்ப்பு மட்டும் போதாது. மாநில அரசாங்கத்தின் சார்பாகக் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் தயாராக வேண்டும். மாநிலத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுக்குப் பெயரளவுக்கு எதிர்த்து விட்டு இதற்கு முன்பு போல மத்திய அரசோடு ஒத்துப்போனால் தமிழக மக்களின் முழு எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்