சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “நாட்டில் மக்களுக்கு இன்று பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று முதலமைச்சர் பேசினார் என்று தொலைக்காட்சிகளில் நேரலையில் வந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் 2 மணி நேரம் பேசியுள்ளார்.
2 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக இவ்வளவு பிரச்சனைகளையும் பேசிய ஒரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். சட்டமன்றத்தில் பல்வேறு தலைவர்கள் பேசினாலும் கூட தொடர்ந்து இதற்கு முன்பு பட்ஜெட் உரையில், காவல்துறை மானியத்தில் இரண்டரை மணி நேரம் பேசியுள்ளார். எதிர்க்கட்சியில் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். எந்தெந்த இடங்களில் கஞ்சா விற்பனை ஆகிறது, எங்கெல்லாம் அபின் பிடித்தார்கள் என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுப் பேசினார். அதேபோல் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வரிடம் இருந்து இதற்கெல்லாம் பதிலே வரவில்லை. எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி சொல்வது போல் அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்'' என்றார்.