Skip to main content

‘எனக்கு பதவி தரலன்னா அவ்ளோதான்’ முன்னாள் அமைச்சரை சிறையில் இருந்தபடி மிரட்டிய அதிமுக நகர செயலாளர்! 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

AIADMK city secretary threatens ex-minister

 

அதிமுக உட்கட்சித் தேர்தல் இரண்டாம் கட்டமாக மார்ச் 27ஆம் தேதி தொடங்கி 25 கழக மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகளுக்கு நடக்கிறது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்கான தேர்தலில் நகரசெயலாளர் ஒருவர், சிறைக்குள் இருந்தபடி கட்சியின் அமைப்பு செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான முன்னாள் அமைச்சரை மிரட்டியதும் பரபரப்பாகியுள்ளது.

 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் மனு தந்தனர். ஆரணி அதிமுக நகரச் செயலாளர் அசோக்குமார், நகரக் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார். தங்க நகைக்கடன் வழங்கியதில் 3 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுப்பட்டதால் மார்ச் முதல் வாரம் கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் உட்கட்சித் தேர்தல் நடக்கிறது. நகரச் செயலாளர் பதவிக்கு நகர வைஸ்.சேர்மன் பாரி.பாபு, ஏ.ஜி.ஆனந்தன், சரவணன் என மூவர் மனு செய்தனர். சிறையில் உள்ள ந.செ அசோக்குமார் சார்பாக ஆரணி தொகுதி எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் வேட்புமனுதாக்கல் செய்ய அதிமுக வட்டாரத்தில் பரபரப்பானது.  

 

AIADMK city secretary threatens ex-minister

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய ஆரணி நகர அதிமுகவினர், 2016 – 2021 வரை அமைச்சராக இருந்த சேவூர்.ராமச்சந்திரனை, ஆரணி தொகுதி ஒன்றிய, நகர நிர்வாகிகள் மதிக்கவில்லை. இதனால் தனக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகளை வைத்து கட்சி வேலைகள் செய்தார். ஆரணி நகரத்தில் கட்சி வேலைகளை இப்போது வைஸ்.சேர்மனாகவுள்ள நகர ஜெ. பேரவை செயலாளர் பாரி.பாபுவிடம், அடுத்த ஆரணி ந.செ நீதான் என வாக்குறுதி தந்து கட்சி கூட்டங்களை நடத்தினார். அவரும் அடுத்த ந.செ நாம்தான் என தாராளமாக செலவு செய்தார். தற்போது நடக்கும் உட்கட்சித் தேர்தலில் ந.செ பதவிக்கு மனு செய்ய முடிவு செய்த பாரி.பாபு, முன்னாள் அமைச்சரிடம் போய் கேட்டபோது, மனு செய் என்றார்.

 

இந்தத் தகவல் சிட்டிங் ந.செவான சிறையில் உள்ள அசோக்குமாரிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். என்னைத்தான் ந.செவா தேர்வு செய்யவைக்கனும், அப்படி செய்யலன்னா அமைச்சரா இருக்கும்போது எங்கங்க சொத்து வாங்கி வச்சி இருக்கிங்க, உங்க பினாமிங்க யார், யார்? வேலை வாங்கி தர்றன்னு பணம் வாங்கிக்கிட்டு தராதது, எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற மாற்று கட்சியில் உங்களுக்கு உதவியது யார், யார் என்கிற எல்லாத்தையும் வெளியில சொல்லுவன் என சிறையில் இருந்தபடியே மிரட்டலாக தகவல் அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை அவர்கள் எம்.எல்.ஏவான சேவூர்.ராமச்சந்திரனிடம் சொன்னதும், ஆடிப்போய்விட்டார். உடனே ஐ.டி விங்கில் உள்ள சரவணன் என்பவரை சிறைக்கு அனுப்பி வேட்புமனுவில் கையெழுத்து வாங்கிவந்து ந.செ பதவிக்கு அசோக்குமாருக்காக எம்.எல்.ஏவே மனுவை தாக்கல் செய்தார்.

 

AIADMK city secretary threatens ex-minister

 

மோசடி புகாரில் ஜெயில்ல இருக்கறவருக்காக நீங்க எப்படி மனு செய்யலாம் என ந.செ பதவியை குறிவைத்துள்ள பாரி.பாபு, சரவணன், ஆனந்தன் தரப்பு நேரடியாக அவரிடம் கேட்டனர். இப்போ பதவி தரலன்னா நாமளே அவரு தப்பு செய்தாருனு ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும், அதனால் அவரையே ந.செ வாக்கிவிடலாம். இந்ததொகுதியில் உள்ள 4 ஒ.செகளையும் மாற்ற வேண்டாம் அவர்களையே மீண்டும் தேர்வு செய்துவிடலாம் எனச்சொல்லியுள்ளார். ஆரணி வடக்கு ஒ.செ பி.ஆர்.ஜீ.சேகர் உடல்நிலை சரியில்லாமல் பதவி வேண்டாம், வேறு யாருக்காவுது தந்துடுங்க என்கிறார், அவரை மாற்றக்கூடாது என்கிறார் இவர்.

 

AIADMK city secretary threatens ex-minister

 

முன்னாள் அமைச்சரின் முடிவை நான் ஏற்றுக்கமாட்டேன் என வடக்கு மா.செ தூசி.மோகனிடம் மாவட்ட கழக பொருளாளரான கோவிந்தராஜ் சொன்னவர், ஜெயில்ல இருக்கறவருக்கு பதவி தரக்கூடாது. ந.செவா அவர் சமூகத்தை சேர்ந்தவங்களே கடந்த 25 வருஷமா இருந்துட்டாங்க. இங்க பலமா இருக்கற வன்னியர்களுக்கு இந்த முறை ந.செ பதவி வேண்டும், என்மகன் ஆனந்தனை ந.செவாக்குங்க என்றுள்ளார். நகரசெயலாளர் பதவி ஆசைக்காட்டி கடந்த 5 வருடத்தில் சிலகோடிகளை என்னை செலவு செய்யவச்சார். அது உங்களுக்கே தெரியும், 27 வட்டசெயலாளர்கள் என் ஆதரவாளர்கள் அதனால் சொன்னப்படி ந.செ பதவியை எனக்குதான் தரனும் என்றுள்ளார் பாரி.பாபு. 50 கோடி ரூபாய் செலவு செய்து எம்.எல்.ஏவாகி கட்சி மானத்தை இந்தமாவட்டத்தில் நான் காப்பாத்தி இருக்கேன், அசோக்குமாரை ந.செ பதவியில் நியமிக்கனும் என்கிறார் முன்னாள் அமைச்சர். ஆரணி விவகாரத்தில் நான் தலையிடல நீங்களே முடிவு செய்துக்குங்க எனச்சொல்லி ஒதுங்கியுள்ளார் தூசி.மோகன். நான் சொல்வதை செய்யச் சொல்லுங்க என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவகாரத்தை கொண்டுசென்றுள்ளார் எம்.எல்.ஏ என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.