Skip to main content

“பா.ஜ.கவில் இணைய எல்.முருகன் தான் காரணம்” - விமான நிலையத்தில் பேசிய குஷ்பு! (படங்கள்)

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

பா.ஜ.கவில் இணைந்த நடிகை குஷ்பு இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமானநிலையத்தில் பா.ஜ.கவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 

கடந்த சில தினங்களாகவே நடிகை குஷ்பு பா.ஜ.கவில் இணைவிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், நடிகை குஷ்பு அதனை மறுத்து வந்தார். இந்நிலையில், நேற்று டெல்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் சி.டி.ரவி முன்பு பா.ஜ.கவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று விமானம் மூலமாக சென்னை வந்த நடிகை குஷ்புவுக்கு பா.ஜ.க தொண்டர்கள், மலர் தூவி, ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பா.ஜ.கவில் நான் இணைவதற்கு எல்.முருகன் தான் காரணம். அவர் எடுத்த முயற்சியில்தான் நான் பா.ஜ.கவில் இணைந்தேன். அந்தக் கட்சியில் (காங்கிரஸ்) நான் ஆறு வருடங்கள் இருந்தேன். அனால், இப்போதுதான் நான் நடிகை என்று காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்துள்ளது. 


சிந்திக்கிற மூளை வளர்ச்சியற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது அக்கட்சியின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் நான் வைக்கவில்லை. அதேபோல் காங்கிரஸிலிருந்து வெளியேறும்போது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால், நான் வெளியேறிய பிறகு தவறான விமர்சனங்கள் எல்லாம் என்மீது வைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும் கட்சியைவிட்டு வெளியேறியவர்களுக்கும் மரியாதை இல்லை. மற்றவற்றை கமலாலயத்தில் தெரிவிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று வெளியேறிய குஷ்பு, பாஜகவில் இணைந்தது தொடர்பாக, காங்கிரசின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்