Skip to main content

15 லட்சம் அபின் கஞ்சா கடத்திய பிஜேபி பிரமுகர் உட்பட 5 பேர் கைது! 2 கார் பறிமுதல்!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
Tiruchirappalli

 

 

திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் போதைப்பொருள் அபின் கஞ்சா கடத்தல் என்பது கடந்த சில ஆண்டுகளாக இல்லாத நிலையில் தற்போது 1800 கிலோ அபின் கஞ்சா கடத்தல் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரோனா ஊரடங்கு நேரத்தில் காரில் கடத்தி வந்ததும், அதுவும் ஆளும் பிஜேபியை சேர்ந்த முக்கிய பிரமுகர் இதற்கு துணையாக இருந்தது கட்சியினர் இடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி வழியாக மதுரைக்கு காரில் போதை பொருளான ஒபியம் பவுடர் கடத்தப்படுவதாக திருச்சி ஓசிஐயு டி.எஸ்.பி. செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் இரவு நேரத்தில் மன்னார்புரம் ரவுண்டானா அருகில் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

 

அப்போது ஒரு காரில் 2 பாட்டில்களில் ஒபியம் பவுடர் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் இருந்து இதனை கடத்தி கொண்டு வந்ததாக பெரம்பலூர் ரோவர்ஸ் சாலையை சேர்ந்த லுவாங்ககோ அடைக்கலராஜ் (வயது 42), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மான்பிடி மங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற அத்தடியான் (44), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (40) வெண்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஆறுமுகம் (65) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணையில் அடைக்கலராஜ் ஜெயபிரகாஷ் போதைபொருளான அபின் விற்று வந்திருக்கிறார். அவரிடம் இருந்து 1800 கிராம் அபின் கைப்பற்றப்பட்டது.  இது சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 15 இலட்சமாகும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

 

பிடிபட்டவர்களை போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. காமராஜ், இன்ஸ்பெக்டர்கள் பால்சாமி, கலைவாணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் ஒரு கார் பெரம்பலூரை சேர்ந்த சித்தா டாக்டர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அந்த டாக்டர் நேற்று முன்தினம் காப்பீடு திட்டம் தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி திருவெறும்பூருக்கு வந்து உள்ளார். ருவாண்டோ அடைக்கலராஜ் டாக்டரின் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் அவரை நம்பி காரை கொடுத்து உள்ளார். இந்த போதை கும்பலுக்கும், சித்தமருத்துவருக்கும் சம்மந்தம் இல்லை என்று போலிஸ் விசாரணையில் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த கார் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால் தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

 

இதில் பெரம்பலூரை சேர்ந்த லுவாங்ககோ அடைக்கலராஜ் என்பவர் பிஜேபி கட்சியில் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இது குறித்து பெரம்பம்பலூர் மாவட்ட பொருப்பாளர் இல.கணேசனிடம் பேசினோம். அவர் 4 வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்தார், தற்போது கட்சியில் பொறுப்பில் இல்லை என்று விளக்கம் கொடுத்தார். 

 

ஆனாலும் அந்த பகுதியில் லுவாங்ககோ அடைக்கலராஜ் பிஜேபில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இவர் பெரம்பலூர் பகுதியில் ஏர்கண்டிஷன் கடை வைத்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்