Skip to main content

பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் எனது நண்பர்கள் - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
Interview



சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
 

இந்தநிலையில் நம்மிடம் பேசிய நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, 
 

தமிழகம் தாண்டியும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இது. இத்தீர்ப்பு இந்த கோணத்தில் தான் வர வாய்ப்புள்ளது என நான் ஓரளவு யூகித்திருந்தேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டமன்ற சிக்கல்களில், சபாநாயகர் நடவடிக்கையை ஆதரித்தே, அதிகமான தீர்ப்புகள் வந்துள்ளன. அந்த வகையிலேயே இத்தீர்ப்பும் வந்துள்ளதாக தெரிகிறது. இதில் வெற்றி பெற்ற முதல்வர், அமைச்ச்சர்கள் மற்றும்  ஆளுங்கட்சியினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

இத்தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் எனது நண்பர்கள். அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பார்கள். அரசியலில் இது போன்ற சவால்களை எல்லாம் கடக்க வேண்டும். நம்பிக்கையோடு மக்கள் பணியாற்றினால், மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை ஆறுதலாக நட்பு முறையில், அவர்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இத்தீர்ப்பு மூலம் ஆளுங்கட்சியினர்  மீண்டும் தங்கள் ஆட்சிப் பணிகளை தொடரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை  அரசுக்கு முன் வைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 

 மாநில உரிமைகள் பறி போவதையும், விட்டுக் கொடுப்பதையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. இதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 

 எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வதில் சமூக, அரசியல்  பாரபட்சம் நிலவுவதாக அதிருப்தி நிலவுகிறது. அதைப் போக்கும் வகையில் தமிழக அரசு சிறைவாசிகள் விடுதலையில் மனிதாபிமானத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும்.
 

 இந்த மூன்று கோரிக்கைகளையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு கூறினார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.