Skip to main content

கோவக்சினுக்கு அவசரக்கால அனுமதி; முடிவெடுப்பது எப்போது? - who தகவல்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது.

 

இதனையடுத்து விரைவில் கோவக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதனும் ஒரு பேட்டியில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.

 

இருப்பினும் கோவக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் கோவக்சினுக்கு அவசரக் கால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகி வந்தது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு கோவக்சினுக்கு அவசரக்கால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கக் கூடுதல் தரவுகளைக் கேட்பதாகத் தகவல் வெளியானது. இதனால் கோவக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது.

 

இந்தநிலையில் கரோனா தடுப்பூசிகள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆவணத்தில், அக்டோபர் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்