Skip to main content

போலி வாட்ஸ் ஆப் கணக்குக்கு தடை... வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்கை...!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

வாட்ஸ் ஆப் போன்று போலியாக அங்கீகராமற்று இருக்கும் செயலிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களின் கணக்கு தடை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் செயலியைப் போன்றே பல போலி செயலிகள் கூகுள் ப்ளே-ஸ்டோரில் இருக்கிறது. 

 

whatsapp

 

ஹேக்கர்கள், வாட்ஸ் ஆப் போன்று போலியான  செயலியை உருவாக்கி அதனை கூகுளின் ப்ளே-ஸ்டோரில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அந்த செயலிகளை பயன்படுத்துவோரின் தகவல்களை அவர்களுக்கு தெரியாமலே அந்த ஹேக்கர்கள் அதனை திருடிவருகின்றனர். 
 

அதேசமயம் சிலர் வாட்ஸ்-ஆப் கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும் இதுபோன்ற போலி செயலிகளை பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, கடைசியாக வாட்ஸ்-ஆப்பை பார்த்த நேரம் எனக் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்துவிட்டு, அவர்கள் எப்போது பயன்படுத்தினாலும் அவர்கள் குறித்து வைத்த நேரமே அவர்கள் கடைசியாக வாட்ஸ் ஆப் பார்த்த நேரமாக காட்டும் வசதியும் இது போன்ற போலி வாட்ஸ் ஆப் செயலிகளில் உள்ளது. 
 

இதுபோன்ற சில வசதிகளுக்காக சிலர் இந்த போலி வாட்ஸ்-ஆப் செயலிகளில் கணக்குத்தொடங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதுபோல் போலி வாட்ஸ் ஆப்களை பயன்படுத்துவதனால் அவர்களின் தகவல்கள் ஒரு பக்கம் திருடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

 

இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் வாட்ஸ்-ஆப் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்-ஆப் ப்ளஸ் (WhatsApp Plus) மற்றும் ஜிபி வாட்ஸ்-ஆப் (GB WhatsApp) ஆகிய செயலிகளை பயன்படுத்தும் வாட்ஸ்-ஆப் பயன்பட்டாளர்களின் கணக்கு முடக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
 

இந்த இரண்டு செயலிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் இல்லை என்றும், இந்தச் செயலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களின் பாதுகாப்பிற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் பொறுப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

இந்த செயலிகளை பயன்படுத்து வாடிக்கையாளர்கள், உடனே அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்-ஆப் செயலிக்கு தங்கள் தகவல்களை மாற்றிக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துமாறும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

 

தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் வாட்ஸ்-ஆப் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் கணக்குகள் தற்காலிகமாக  முடக்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மழை பாதிப்பு; உதவிக்கு வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
WhatsApp number to report rain damage; Tamil Nadu Government Notification

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இந்த நிலையில், மழை பாதிப்பை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பு, உதவி தேவைகளை மக்கள் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் @tn_rescuerelief என்ற எக்ஸ் தள பக்கத்திலும் தங்களது குறைகளை தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.