Skip to main content

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் சிஏஏ அமல்” - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
 Union Home Minister Amit Shah says Implementation of CAA across the country before Parliamentary Elections

2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (10-02-24) தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய தொழில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “குடியுரிமை திருத்தச்சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. விதிகள் வெளியிட்ட பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமல்படுத்தப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டப்பட்டுள்ளனர். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்