நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஒன்றிய அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, “லாபத்தில் இயங்கும் ரயில்களை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது.
ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ரயில்வே துறையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. முந்தைய அரசு மீது பழி போடுவது ஏற்கத்தக்கது அல்ல. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
கரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக இருந்த கோச்சுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துறையின் நிதிச் செயல்பாடுகள், குறைத்து, ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. சரிசெய்யப்பட வேண்டியது நிறைய இருப்பினும், ஏன் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறது.
தெற்கு ரயில்வேக்கு 59 கோடி மட்டும் ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, வடக்கு ரயில்வேக்கு மட்டும் 13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள், ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கிறீர்கள். இந்த நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உங்களால் ஏற்படுத்தித் தர முடியவில்லை. இந்தியா முழுக்க ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 2.65 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களையும் நிரப்பாமல் அப்படியே வைத்திருக்கிறது" என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேசமாக குற்றம்சாட்டினார்.