Skip to main content

எதிர்க்கட்சி கூட்டணி: சோனியா காந்திக்கு உத்தவ் தாக்கரேவின் கோரிக்கை!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

uddhav thackeray - sonia

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், விரைவில் வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் என இந்திய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. அதேசமயம் சிவசேனா மற்றும் காங்கிரஸ் இடையேயான நெருக்கமும் அதிகரித்துவருகிறது.

 

விரைவில் சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (14.12.2021) சிவசேனா உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

 

அக்கூட்டத்தில், பாஜகவை எதிர்கொள்ள மாநில வாரியாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில் நேற்று மஹாராஷ்ட்ரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சோனியா காந்தியும் உத்தவ் தாக்கரேவும் நீண்ட நேரம் உரையாடியதாகவும், அந்த உரையாடலின்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளன.

 

அண்மையில் ராகுல் காந்தியை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை முன்னின்று செய்ய வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் உழைக்கும் விவசாயிகள் இயக்கம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Farmers Movement supporting India Alliance

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு  கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள்  மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து  உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய   அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.

இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள,  18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த  வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது

இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான  பிஜேபி  மற்றும்  அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை. 

மேற்காணும் அனைத்து  நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக்  கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும்  வர்க்கத்தின் நலன்   காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. 

Next Story

“மோடி சொன்னதென்ன? தமிழக முதல்வர் செய்ததென்ன?” - தீவிர வாக்கு சேகரிப்பில் சி.என்.அண்ணாதுரை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
“What did Modi say? What did the Tamil Chief Minister do?” - CN Annadurai in serious vote collection

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்நிலையில், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை திமுக அரசின் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது “மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலின் போது நமது முதல்வர் வாக்குறுதிகளைக் கொடுத்தார். சொன்ன வாக்குறுதிகளையும் செய்தார், சொல்லாதவற்றையும் செய்திருக்கிறார்”.

பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம் என்றார். கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்றார். ரூ.400 இருந்த சிலிண்டர் 1000 ரூபாயாக விலை ஏறிப்போய் விட்டது. எல்லோரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசியைக் குறைப்போம் என்றார், குறைக்கவில்லை, விலை தான் ஏறிப்போச்சு. வரியினை ஏற்றியதால் தாய்மார்கள் வாங்கும் தங்கம் 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மக்களிடம் வரியின் மூலமாக பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  சலுகை கொடுக்கிறது மோடி அரசு. இந்த தேர்தலில் தான் அந்த அரசினைத் தூக்கி எரிய வேண்டியது முக்கியமானதாகும்.

நமது முதல்வரோ ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வேன் என்றார். செய்து கொண்டிருக்கிறார். மகளிர் உதவித்தொகை ரூ.1000 மாதம் தருவதாகச் சொன்னார், தந்து விட்டார். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கவுள்ளார். கட்டணமில்லா பேருந்து பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். நமது குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறார். கொரோனா உதவி தந்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார். 

இந்தப் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர்குழு கடன் தொகை வட்டியில்லா கடனாக தரப்படும் என்றிருக்கிறார். மகளிர் குழு பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றிருக்கிறார். இப்படியாக எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் வாரி வழங்கியிருக்கிறார். வழங்கவும் உள்ளார். அவரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு அளித்திருந்தீர்கள். மீண்டும் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.