
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், நேற்று இரவு மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று பிற்பகலில் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாயில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையால் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றநோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் காவல்துறை முடித்து வைத்தது.

அதன் பின்னர் ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானிக்கு சொந்தமான தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், மும்பை க்ரின் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் இன்று காலை ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மதியம் இரண்டு மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து தொடங்கி பவன் ஹன்ஸ் பகுதி வரை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பிற்பகல் 3:30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.