
இந்தியாவில் சிறுத்தை இனம் 1952 ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை இந்தியா கொண்டு வரத் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் எட்டு ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த எட்டு சிறுத்தைகளையும் பாதுகாக்க அரசு முடிவு எடுத்திருந்தது.
இதனடிப்படையில் கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் உடலில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாட்டுச் சிறுத்தைகள் பிற நாட்டிற்கு வழங்கப்பட்டது உலகிலேயே இது முதல் முறை என்றும் கூறப்பட்டது. ஆப்ரிக்காவின் நமீபியாவிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு இடைநில்லா சரக்கு விமானத்தின் மூலம் 8 சிறுத்தைகளும் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் பிறகு அங்கிருந்து 3 சிறுத்தைகள் மத்தியப்பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவிற்கு இந்த சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மூன்று சிறுத்தைகளும் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடியால் வனத்திற்குள் விடுவிக்கப்பட்டன.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட உதய் என்ற 6 வயது சிறுத்தை வழக்கத்தை விட மிகவும் சோர்வாக காணப்பட்டதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 23.04.2023 அன்று மாலை உயிரிழந்தது. தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி ஷாஷா என்ற சிறுத்தையும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உயிரிழந்தது.
இந்நிலையில் குனோ பூங்காவில் பெண் சிறுத்தையான தக்ஷா என்ற மேலும் ஒரு சிறுத்தைப் புலி உயிரிழந்துள்ளதாக தலைமை வன பாதுகாவலர் தகவல் தெரிவித்துள்ளார். இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கி புலிகள் இருந்த இடத்தில் தக்ஷா திறந்து விடப்பட்டதாகவும் அப்பொழுது தாக்குதலுக்கு உள்ளான தக்ஷா இறந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மற்ற சிவிங்கி புலிகள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 40 நாட்களில் குனோ பூங்காவில் மூன்றாவது சிறுத்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.