Skip to main content

“இனி என்னால் தொல்லைகள் வராது” - காதலனுக்கு மெஸேஜ் அனுப்பிய பின் தூக்கிட்டுக் கொண்ட ஆசிரியை

Published on 30/01/2023 | Edited on 31/01/2023

 

Teacher passed away  in Puducherry; Police investigation

 

புதுச்சேரியில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் முருகன். 45 வயதான இவருக்கு நான்கு மகள்கள். முருகனின் இரண்டாவது மகள் வஸ்மிதா. 21 வயதான இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய வஸ்மிதா அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். சிறிது நேரத்திற்கு பிறகு வஸ்மிதாவின் தங்கை கதவை தட்டிய போது அவர் திறக்கவில்லை. 

 

இதனைத் தொடர்ந்து அவரது தந்தையும் வந்து கதவை தட்ட நெடுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வஸ்மிதா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக வஸ்மிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வஸ்மிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணையில், ஆசிரியையின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த சுரேஷ் என்பவருக்கு தனது செல்போனில் இருந்து, “இனிமேல் என்னால் உங்களுக்கு தொல்லைகள் வராது” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது, வஸ்மிதாவும் சுரேஷ் என்பவரும் காதலித்து வந்ததாகத் தகவல் கிடைத்தது. இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்