![Supriya Sule after Mamata's announcement to says There is no conflict in the India alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/Skht8H3LSmH1wBrTfaoXpqh9i1KfemeU7ow4bD0sp50/1706101683/sites/default/files/inline-images/supriya-sule-ni.jpg)
இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் இன்று (24-01-24) அறிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார்.
![Supriya Sule after Mamata's announcement to says There is no conflict in the India alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/h0xCNQppptKc_ai1hqz2jiqF37J48asTPH5BD2OaI0w/1706101707/sites/default/files/inline-images/VCK-AD_8.png)
இந்த நிலையில், மம்தா பானர்ஜி அறிவிப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே இன்று (24-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மம்தா பானர்ஜி எங்களுடைய சகோதரி. நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கூட்டணிக்கு எந்த இழப்பும் ஏற்படாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாடல் இருக்கும். இந்தியா கூட்டணியில் எந்தவொரு பூசலும் இல்லை” என்று தெரிவித்தார்.