Skip to main content

ரூ.3,250 கோடி கடன் முறைகேடு; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் சி.ஈ.ஓ கணவர் கைது…! 

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

Rs 3,250 crore loan, Husband of ICICI Bank CEO arrested

 

 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்திவந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்ததாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் புகார் எழுந்தது. 

 

மேலும் வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவந்தது. இது முறைகேடாக நடந்தது எனவும் சொல்லப்பட்டது அதனைத் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அப்போதைய தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். 

 

அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது 2019 ஜனவரி மாதம் 23-ம் தேதி அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

 

2019ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரித்த போது, வங்கி சார்ந்த விஷயங்கள் எதையும் தனது கணவரிடம் ஒருபோதும் விவாதித்தது கிடையாது என்று சந்தா கோச்சார் கூறியிருந்தார். மேலும் தனது கணவரின் தொழில் பரிவர்த்தனைகள் குறித்த விவரம் எதுவும் தனக்கு தெரியாது என்றும் சந்தா கோச்சார் தெரிவித்திருந்தார்.

 

வீடியோகான் நிறுவனத்துக்கு தகுதியின் அடிப்படையில்தான் கடன் வழங்கப்பட்டது என்று தெரிவித்திருந்த அவர், 2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை பரிசீலிக்கும் குழு உரிய வகையில் பரிசீலித்த பிறகே கடன் வழங்க ஒப்புதல் அளித்தது என்றும் தெரிவித்திருந்தார். 

 

இந்த வழக்கில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் வசம் இருந்த ரூ. 78 கோடி சொத்துகளை இந்த ஆண்டு துவக்கத்தில் அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் நிதி மோசடி தடப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தீபக் கோச்சார் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்