Skip to main content

முன்கூட்டியே வருகிறதா நாடாளுமன்றத் தேர்தல்?

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Is the parliamentary election coming early?

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. 

 

இந்த  நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பாசறை சார்பில் நேற்று முன் தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நம்முடைய தேசத்தை பா.ஜ.க சமூகங்களுக்கிடையில் பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நமது நாட்டை வெறுப்புணர்வு நிறைந்த தேசமாக மாற்றிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

வேறு எந்த கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் நாட்டில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர்களையும் பா.ஜ.க. தற்போதே முன் பதிவு செய்து வைத்துள்ளனர். எனவே, அந்த கட்சி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளதாகத் தெளிவாகத் தெரிகிறது. அதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக என்னுடைய கணிப்பாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதிஷ்குமாரிடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே கூறிவிட்டேன். எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியில் ஒன்றிணைந்ததால், அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தால் பா.ஜ.க இதுபோன்று நடத்தக்கூடும். 

 

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்தியா கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதியில் மும்பையில் நடக்க உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், எதிர்க்கட்சிகளின் அணி கூடுதல் பலமடையும். எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

 

எனக்கு என்று தனிப்பட்ட பதவி ஆசையோ, லட்சியமோ இல்லை. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க வுக்கு எதிராக அதிகமான கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. அது தொகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்துவதில் தாமதம் குறித்து மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? பா.ஜ.க தலைவர்கள் இது குறித்து வாய் திறக்க வேண்டும்.” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்