
இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.
அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “லட்சக்கணக்கான மானவர்கள் இந்த வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.
இது சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வு வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும். எனவே அதுவரை நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. நீட் தேர்வில் ஒரு சில மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாகத் தான் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் இதனையடுத்து வாதங்கள் நடைபெற்று வருகின்றன.