Skip to main content

4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற கொடூரத் தாய்; சினிமா பணியில் மடக்கி பிடித்த போலீஸ்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
The mother who lost his lives her 4-year-old son and kept him in a suitcase in goa

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வாழ்கின்றனர். 

இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் நேற்று (08-01-24) காலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக்கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில், சுசானா சேத் ஓட்டலுக்கு வந்த போது அவருடன் இருந்த 4 வயது மகன், வெளியே செல்லும்போது உடன் இல்லாதது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். 

மேலும், இது குறித்து போலீசார் சுசானா சேத்தை செல்போனில் தொடர்பு கொண்டு அவருடைய மகன் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, சுசானா சேத் தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறி நண்பருடைய முகவரியை கொடுத்துள்ளார். அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது, அது போலியான முகவரி என்பதை கண்டுபிடித்தனர். 

இதனை தொடர்ந்து, போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசானா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும், கார் ஓட்டுநரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அதன்படி, கார் ஓட்டுநர் ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். அங்கு கோவா போலீசார் கொடுத்த தகவலின்படி, காரை போலீசார் சோதனை செய்தனர்.  அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாக கிடப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்