Skip to main content

மின் பகிர்மான கழகங்களின் நிலுவைத்தொகை உயர்வு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Electricity distribution companies' balance increased!

 

நாடு முழுவதும் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்பகிர்மான கழகங்கள் செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய் 1.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 20,788 கோடியாக அதிகரித்துள்ளது. 

 

மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து அந்தந்த மாநில மின்பகிர்மான கழகங்கள் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்கின்றனர். மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின் பகிர்மான கழகங்கள் ரூபாய் 1.21 லட்சம் கோடி ரூபாயை நிலுவையாக வைத்துள்ளனர். 

 

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகளவில் நிலுவை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் 44 நாட்களுக்குள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனில், மின்பகிர்மான கழகங்களுக்கு அபராதம் விதிக்கின்றன. 

 

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மின் பகிர்மான கழகங்களுக்கு நிவாரணம் வழங்கியதோடு அபராத தொகையையும் தள்ளுபடி செய்தது. இருப்பினும், மின் பகிர்மான கழகங்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 22,627 கோடி ரூபாயும், தமிழ்நாடு 20,788 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது. 

 

கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால், வருவாய் இன்றி இருப்பதாகக் கூறும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள், மின் கொள்முதல் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Appointment of new election commissioners

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகயை சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (14-03-2024) நடைபெற்றது. இந்த தேர்வு குழுவில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். காலை கூடிய இக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்களில், ஞானேஷ் குமார் கேரளா மாநிலத்தையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Appointment of new election commissioners

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதற்கான அரசானைய மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் உடனடியாக பதவியேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்களின் பதவியும் நிரப்பபட்டு விட்டதால் விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.