மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்து விட்டதாக சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதர கட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
![MAHARASHTRA STATE GOVERNMENT FORMS ALLIANCE SHIV SENA PARTY LEADERS MEET GOVERNOR](http://image.nakkheeran.in/cdn/farfuture/C5klLxZ2YpGAIbPIq1UbN46QfG6qBPLWkvJuOL_usdM/1573483897/sites/default/files/inline-images/EJGIF58UYAIw2cS_0.jpg)
இந்நிலையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. மேலும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களை காப்பற்றிய போதிலும், சிவசேனா முதல்வர் பதவியை கேட்பதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தது சிவசேனா கட்சி. அதன்படி சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று (11/11/2019) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் தொடர்ச்சியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டார்.
![MAHARASHTRA STATE GOVERNMENT FORMS ALLIANCE SHIV SENA PARTY LEADERS MEET GOVERNOR](http://image.nakkheeran.in/cdn/farfuture/FtCMQLpTFHLn4fyDHxbYiwN4SpLTG8LNKAtQO3943NI/1573483929/sites/default/files/inline-images/ADHITHYA3.jpg)
பின்பு சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே தலைமையிலான தலைவர்கள், அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, ஆட்சி அமைக்க விரும்புவதாகவும், அதனால் ஆட்சி அமைக்க 48 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டோம். ஆனால் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார் என்று கூறினார். இருப்பினும் ஆளுநர் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. எனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்றும், ஆதரவளிப்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளது.