Skip to main content

குணால் கம்ரா உயிருக்கு ஆபத்து; முன் ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

Madras High Court grants anticipatory bail to Kunal Kamra!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸும் இருந்தனர். அதன்பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேசிய  ஜனநாயக கூட்டணியே வெற்றிபெற்ற நிலையில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல அரசியல் நையாண்டி ‘ஸ்டண்ட் அப்’ காமெடியன்  குணால் கம்ரா தன்னுடைய நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குணால் கம்ரா தனது காமெடி மூலம் பார்வையாளர்களுக்கு அரசியலைக் கடத்தி பலரையும் ரசிக்க வைத்து வருகிறார். இதனால் அவரது காமெடி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.  இந்த நிலையில் மும்பை கார் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் குணால் கம்ராவின் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவர் துரோகி என்று கூறி காமெடி செய்ததாக கூறப்படுகிறது. இது சிவசேனா கட்சினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சி நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற சிவசேனா கட்சியினர் ஸ்டுடியோவையும், ஹோட்டலையும் அடித்து தும்சம் செய்தனர். மேலும் அங்குள்ள சேர்கள், மேஜைகளை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள், குணால் கம்ரா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இருப்பினும் கோவம் குறையாத சிவசேனா கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்திலும், ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் குணால் கம்ரா மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் சிவசேன கட்சியினர் சில மிரட்டல்களையும் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “உங்களது நையாண்டியை புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் அதற்கு என்று ஒரு எல்லை உண்டு. அந்த காமெடியன் என்னை மட்டுமல்ல, பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம், பத்திரிகையாளர் என பலருக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். இவர் ஒருவரை பற்றிப் பேசுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. இதனைக் கருத்துச் சுதந்திரம் என்று கூற முடியாது; யாரோ ஒருவருக்கு வேலை செய்வது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் கம்ரா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், தான் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும், அதனால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் மும்பை கார் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்