அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணை 2018 பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எனக்கூறி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாளையோடு(டிச. 6) 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், அது இருந்த இடம் தொடர்பான வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அக்கோரா, ராம்லல்லா மற்றும் சன்னி வஃபு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளுக்கு சரிபாதியாக பிரித்துக் கொள்ள உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று அமைப்புகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உட்பட, 13 மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, அசோக் பூஷன் மற்றும் அபுல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணை மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் இறுதிகட்ட விசாரணை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எனக்கூறி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.