Skip to main content

ஜெயலலிதாவின் நகைகள்; கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Karnataka court action order on Jayalalithaa's Jewellery

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியில் இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1999லிருந்து 96 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது பெங்களூர் நீதிமன்றம். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஐந்து பெட்டிகளில் கர்நாடகா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவதற்குப் பதிலாக வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி, கர்நாடகா வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியது. மேலும், இந்த வழக்கு செலவு கட்டணமாக ரூபாய் 5 கோடியை கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் என்று கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை நாளை (06-03-24) தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருந்தது. 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஜெயலலிதா வாரிசுகள் நாங்கள் தான். ஜெயலலிதா நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். எனவே, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

Karnataka court action order on Jayalalithaa's Jewellery

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அளித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

சார்ந்த செய்திகள்