Skip to main content

இந்தியாவின் முதல் ஏ.ஐ. பள்ளி கேரளாவில் துவக்கம்! - ஆசிரியர்களின் பணி? 

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

India's first A.I. School starts in Kerala! The work of teachers?

 

இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக ஏ.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலாவதாக தற்போது கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்த ஏ.ஐ. முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாக மாற்றும் என்றும் மனிதர்களுக்கு மாற்றாக (ஏ.ஐ.) உருமாறும் எனப் பல கருத்துகளை நாம் கேட்டிருப்போம். சமீபத்தில் பல நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில், கல்லூரிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையும் பரவி வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் முதல் பள்ளியாக கேரளா மாநிலத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவன் பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார். 

 

அப்போ இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க மாட்டார்களா? சாட் ஜி.பி.டி.யை கொண்டுதான் பாடங்கள் நடத்தப்படுமா என்றும் நினைக்கக் கூடும். ஆனால், தற்போது அந்தளவு திட்டங்களை வகுக்கவில்லை. மாறாக, பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளைப் பள்ளி பயன்படுத்த உள்ளது. பாடத்திட்டங்களை வடிவமைப்பது, தாமாகவே கற்றுக்கொள்வது, தேர்வு மதிப்பீடு மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் உதவி உள்ளிட்ட கல்வியின் பல்வேறு அம்சங்களில் மெஷின் லெர்னிங், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற (ஏஐ) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.

 

India's first A.I. School starts in Kerala! The work of teachers?

 

கேரள பத்திரிகைகளில், சாந்திகிரி பள்ளி, ஐ லேர்னிங் என்ஜின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடனும் வேதிக் இ-பள்ளியுடனும் சேர்ந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏ.ஐ. கற்றல் முறை திட்டத்தின் செயல்பாட்டில் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் மற்றும் துணைவேந்தர்கள் போன்ற வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

வேதிக் இ-பள்ளியின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு சர்வதேச தரத்துடன் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு புதுமையான கற்றல் முறையாக இது இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.

 

இந்த ஏஐ வசதி முதற்கட்டமாக பள்ளியின் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதனுடன் ஏஐ, பல கட்ட தேர்வு மதிப்பீடுகள்; திறன் மேம்பாட்டுத் தேர்வு; நேர்காணலுக்கு உதவுவது; எழுத்து திறனை மேம்படுத்துவது என ஏஐ மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது. அதற்கான உதவித் தொகைகளை பெறுவது உள்ளிட்டவற்றில் ஏஐ வழிகாட்டும் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.