Skip to main content

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்