
கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டெல்லியில் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டிய அம்மாநில முதல்வர், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களின் நகல்களைக் கிழித்தெறிந்து, வரவிருக்கும் தேர்தலுக்கு கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி திரட்டவே இச்சட்டங்களை பா.ஜ.க. இயற்றியிருக்கிறது. மேலும் தேர்தல் நடைமுறையை பா.ஜ.க. செலவுபிடித்ததாக மாற்றிவிட்டது என அறிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், சிரோன்மணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவியுமான ஹர்சிம்ரத் கெளர் பாதல், அரவிந்த் கெஜ்ரிவாலின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். “டெல்லி சட்டமன்றத்தில் நவம்பர் 23-ஆம் தேதி இச்சட்டங்களை அறிவிப்புச் செய்த கெஜ்ரிவால், தற்போது சட்டத்தின் நகல்களைக் கிழித்தெறிகிறார். தனது மலிவான நாடகத்தனமான செயல்பாடுகளால் கெஜ்ரிவால் விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார். இந்த நாடகத்தை விவசாயிகள் நம்பமாட்டார்கள்.

கிட்டத்தட்ட இருபது விவசாயிகள் இறந்தபிறகு, திடீரென கெஜ்ரிவால் கடுங்குளிரில் விவசாயிகள் போராடுவதை கண்டுபிடித்திருப்பது விநோதமானது. டெல்லி முதல்வரின் முதலைக் கண்ணீரை, மத்திய அரசின் தாளத்துக்கேற்ப ஆடுபவர் கெஜ்ரிவால் என்பதை விவசாயிகள் அறிவார்கள். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல். இத்தகைய கீழ்மட்ட அரசியல் அதனைக் காப்பாற்றிவிடாது” என கடுமையாகத் தாக்கிப்பேசியுள்ளார்.