
உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். கரோனா பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியபோது, வழிப்பாட்டு தலமான ஆந்திராவிலும் கோயில்கள் மூடப்பட்டன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யப்படும் ஏழுமலையான் கோயிலும் மூடப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தபோது, மதவழிப்பாட்டு தலங்களுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலும் கடந்த ஜூன் 15ந் தேதி திறக்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சராசரியாக 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கட் பெற்றவர்கள் மற்றும் இலவச தரிசன டிக்கட் பெற்றவர்கள் ஆவர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருப்பதி வருபவர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தரிசன டிக்கெட் தருவதை ரத்து செய்ய வேண்டும், அவர்களை ஏழுமலையானை தரிசிக்க வருவதை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தாமோகன்.
அவர் திருமலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோயிலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வர்த்தக தலமாக பயன்படுத்தி வருகிறது. உள்ளுர் மக்களின் நலனை கவனத்தில் கொண்டு வெளிமாநில பக்தர்களை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை அனுமதிக்கக்கூடாது. உள்ளுர் மக்கள் முன்பதிவு செய்யாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பதி திருமலை தேவஸ்தானம், கரோனாவால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறைந்துள்ளதால், வருமானம் குறைந்துள்ளது. இதனால் சம்பளம் வழங்குவது உட்பட பல பிரச்சனைகளால் என்ன செய்வது என தவிக்கிறது. கோயிலுக்கு அதிகளவு பக்தர்களை வரவழைக்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரின் பேட்டி தேவஸ்தான நிர்வாகத்தை அதிருப்தியடைய செய்துள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.