Skip to main content

திருப்பதியில் பிற மாநில மக்களை அனுமதிக்கக்கூடாது –முன்னாள் மத்தியமைச்சர் பேட்டி

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
Tirupati

 

உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். கரோனா பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியபோது, வழிப்பாட்டு தலமான ஆந்திராவிலும் கோயில்கள் மூடப்பட்டன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யப்படும் ஏழுமலையான் கோயிலும் மூடப்பட்டது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தபோது, மதவழிப்பாட்டு தலங்களுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலும் கடந்த ஜூன் 15ந் தேதி திறக்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சராசரியாக 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கட் பெற்றவர்கள் மற்றும் இலவச தரிசன டிக்கட் பெற்றவர்கள் ஆவர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருப்பதி வருபவர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தரிசன டிக்கெட் தருவதை ரத்து செய்ய வேண்டும், அவர்களை ஏழுமலையானை தரிசிக்க வருவதை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தாமோகன்.

அவர் திருமலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோயிலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வர்த்தக தலமாக பயன்படுத்தி வருகிறது. உள்ளுர் மக்களின் நலனை கவனத்தில் கொண்டு வெளிமாநில பக்தர்களை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை அனுமதிக்கக்கூடாது. உள்ளுர் மக்கள் முன்பதிவு செய்யாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பதி திருமலை தேவஸ்தானம், கரோனாவால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறைந்துள்ளதால், வருமானம் குறைந்துள்ளது. இதனால் சம்பளம் வழங்குவது உட்பட பல பிரச்சனைகளால் என்ன செய்வது என தவிக்கிறது. கோயிலுக்கு அதிகளவு பக்தர்களை வரவழைக்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரின் பேட்டி தேவஸ்தான நிர்வாகத்தை அதிருப்தியடைய செய்துள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை; தொடரும் ரெய்டு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
From former ministers to MLAs; Raid on

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Judge action order Case against AIADMK ex-ministers

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (16-02-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது, ‘ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்ட விரோதமாக கூடிய கூட்டமாக கருத முடியாது. எனவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.