
பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை பகுதியில் தீப்பந்த ஊர்வலமும், போர் நினைவு சின்னத்திற்கு மரியாதை செலுத்துதலும் நடைபெற்றது.
கடந்த 1789- ஆம் ஆண்டு ஜூலை 14- ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச் சாலையை, மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதால், இன்றும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் தீப்பந்த ஊர்வலம் (மின் விளக்கு) நடைபெறும். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் மாலை நேரத்தில் மின் விளக்குகளை கொண்டு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்ச் துணை தூதர் லிஸ் டால்போட் பார்ரே, மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதில் பிரெஞ்ச் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இரவு கடற்கரைச் சாலையில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.