
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் ஆறாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்புகளும் வந்துள்ளன. அதன்படி அடுத்த மாதம் 31ம் தேதி வரை மேற்குவங்கத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் 16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.