Skip to main content

பாஜக தலைவர் இல்லத்தில் அவசரக்கூட்டம்... அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு...

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Amit Shah and Narendra Singh Tomar arrive at the residence of JP Nadda

 

 

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து ஆறாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வந்தால், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்தார். ஆனால், அவரது யோசனையை நிராகரித்த விவசாயிகள், தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இந்நிலையில், அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையின்படி, இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். 

 

ஆனால், இதில் வெறும் 32 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமே பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இதில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்