அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்!
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி, 56 பயணிகளோடு சென்று கொண்டிருந்தது ஒரு பேருந்து. அதில் 56 அமர்நாத் யாத்ரீகர்கள் இருந்தனர். திடீரென அந்தப் பேருந்தின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தலைவன் அபு இஸ்மாயில் கடந்த செப்டம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், நேற்று அபு மாவியா, ஃபர்கான் மற்றும் யாவர் ஆகியோர் பாதுகாப்புப் படைட்யினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த ரசீத் அகமது அல்லை என்பவன் சீன துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். அபு இஸ்மாயில் கொல்லப்பட்டதும், அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஃபர்கான் மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.