Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Adjournment of bail plea of Minister Senthil Balaji
கோப்புப்படம்

 

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி  2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 9வது முறையாக நீட்டித்து வருகிற 6 ஆம் தேதி (06.11.2023) வரை நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிட்டார்.

 

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி கடந்த 14 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த 19 ஆம் தேதி (19.10.2023) தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மருத்துவ காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

 

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ராம் சங்கர் என்பவர் மேல்முறையீட்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஏற்கனவே நிறைய வழக்குகள் நாளைய தினம் (20.10.2023) பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜாமீன் மனு அக்டோபர் 30 ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திங்கட்கிழமைக்கு (06.11.2023) ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்