வெளிநாடுகளில் வசிக்கும் 276 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், "தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரானில் உள்ள 255 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற 12 பேருக்கும், இத்தாலியில் 5 பேருக்கும், ஹாங்காங், குவைத், இலங்கை மற்றும் ரவாண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தலா ஒருவருக்கும் கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.