
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “மகேஷ் கெய்க்வாட் மற்றும் கன்பத் கெய்க்வாட் இடையே ஏதோ கருத்து வேறுபாடுகள் இருந்ததால், புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது உடன் இருந்தவர்களை நோக்கி கன்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.